அமெரிக்கா, ஆகஸ்ட் 2028 முதல் இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகள் மீது கடுமையான வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்
கூற்றுப்படி, இந்த நடவடிக்கை அமெரிக்காவில் மருந்து உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ட்ரம்பின் இந்த அறிவிப்பு, அமெரிக்காவிற்கு ஜெனரிக் மருந்துகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடான இந்தியாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
வரி குறித்த ட்ரம்ப்பின் பதிவு
இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் போட்ட ஒரு பதிவில், ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி, இந்த வரி விதிப்புத் திட்டம் கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, நாட்டிற்குள் நுழையும் அனைத்து ஜெனரிக் மருந்துகளுக்கும் அமெரிக்கா எந்த வரியையும் விதிக்காது. மூன்றாம் ஆண்டில் வரிகள் 100 சதவீதமாகவும், அதன்பிறகு 200 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், "ஜெனரிக் மருந்து உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வருவதற்காக இது செய்யப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஆலைகளையும் உபகரணங்களையும் அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்." என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் நோக்கம் என்ன.?
இந்த கொள்கையின் நோக்கம், அமெரிக்க மக்களை பாதுகாப்பதே என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். மேலும், "காப்புரிமை பெற்ற, வர்த்தக முத்திரை பெற்ற அல்லது புதுமையான மருந்துகள் தொடர்பான, மிகவும் வெற்றிகரமாக இருந்துவரும் கொள்கை அப்படியே தொடரும்" என்றும் அவர் கூறினார். இந்தியா உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஜெனரிக் மருந்துகளை வழங்குவதால், அது உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள மருந்துகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன
அமெரிக்க சந்தையில் இந்திய ஜெனரிக் மருந்துகள் சுமார் 40 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன. குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (Global Trade Research Initiative) அறிக்கையின்படி, 2024-2025 நிதியாண்டில், இந்தியா 9.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது, இந்தியாவின் மொத்த உலகளாவிய மருந்து ஏற்றுமதியான 25.8 பில்லியன் அமெரிக்க டாலரில் 38 சதவீதமாகும்.
இருப்பினும், ட்ரம்பின் புதிய வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் இந்திய மருந்து நிறுவனங்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் பிப்ரவரியில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, ஜெனரிக் மருந்துகள் தொடர்பான பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை இந்தியா பெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.










