மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு பிறகு வெளியிடப்பட்ட ஐசிசி ஒருநாள் தரவரிசையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்
பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் பெரும் சரிவைச் சந்தித்துள்ளார். இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர், 6.50 சராசரியுடன் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதன் காரணமாக, இங்கிலாந்து தொடரில் ஆறாவது இடத்தில் களம் இறங்கிய ராகுல், ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 12-வது இடத்திலிருந்து ஆறு இடங்கள் சரிந்து 18-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். மறுபுறம், ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடிப்பதற்கான முயற்சியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில், இரண்டாவது இடத்திலேயே நீடித்தாலும், முதலிடத்தில் உள்ள டேரில் மிட்செலை விட ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார். இந்தத் தொடரில் விளையாடிய மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டில் அரைசதம் அடித்த கில், 99.47 ஸ்டிரைக் ரேட் மற்றும் 94 என்ற சிறப்பான சராசரியுடன் ரன்களைக் குவித்துள்ளார்.
மணிக்கு 154 கிமீ வேகத்தில் பந்துவீசிய அசோக் சர்மா.. ஜிம்பாப்வே தொடரில் சாதிப்பாரா? சிராஜ் குறித்து நெகிழ்ச்சி
அதே நேரத்தில், நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இங்கிலாந்து தொடரைச் சிறப்பாக முடித்ததன் மூலம், ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முறையே தங்களது 3 மற்றும் 4-வது இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். கோலி கடைசி இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்தார்.
அதே சமயம், முதல் இரண்டு போட்டிகளில் சோபிக்கத் தவறிய ரோஹித் சர்மா, கடைசி போட்டியில் 110 பந்துகளில் 138 ரன்கள் குவித்து அசத்தினார். ஒருநாள் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இருக்கும் மற்றொரு இந்திய பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 33.66 சராசரியை மட்டுமே கொண்டிருந்தபோதிலும், இரண்டு இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து, அண்மைய ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் எந்தவொரு இந்திய வீரரும் இடம் பெறவில்லை. முதல் 10 இடங்களில் இருந்த ஒரே இந்திய பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ், மூன்று இடங்கள் சரிந்து 11-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அணியில் இடம் பெற்றிருந்த போதிலும், இங்கிலாந்து தொடரின் மூன்று போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.
மணிக்கு 154 கிமீ வேகத்தில் பந்துவீசிய அசோக் சர்மா.. ஜிம்பாப்வே தொடரில் சாதிப்பாரா? சிராஜ் குறித்து நெகிழ்ச்சி
இந்தத் தொடரில் விளையாடாத அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், முதல் 20 இடங்களிலிருந்து சரிந்து 21-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதே வேளையில், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் 10 இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர் தரவரிசையில் 32-வது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்து தொடரில் 5.50-க்கும் குறைவான எகானமியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக அவர் திகழ்ந்தார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளில் இரண்டில் விளையாடிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஒரு இடம் முன்னேறி 23-வது இடத்தைப் பிடித்துள்ளார்.













